விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 2 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக
ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆலையில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாததால்,
அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இதேபோல் 159 ஆலைகளுக்கு விளக்கம் நோட்டீஸ்
அனுப்பப்பட்டுள்ளன.
ஏற்கனவே நடைபெற்ற முதற் கட்ட ஆய்வில், 61 பட்டாசு ஆலைகளின் உரிமம்
தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. மேலும் விதிமுறை மீறல் தொடர்பாக 689
ஆலைகளுக்கு விளக்கம் கேட்டு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். கடந்த
செப்டம்பர் மாதத்தில் முதலிப்பட்டி பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி
விபத்தில் தொழிலாளர்கள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, வருவாய்துறை, தொழிலாளர்கள் நலத்துறை உள்ளிட்ட 6 துறைகளின்
சார்பில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் விருதுநகர்
மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு
நேற்றுடன் நிறைவடைந்தது.
-இணைய செய்தியாளர் - வெங்கடேஷ்